இலங்கை எப்போது சுதந்திரம் அடைந்தது. (When did Sri Lanka become independent)

When did Sri Lanka become independent

இலங்கை சுதந்திரம் அடைந்த ஆண்டு

1948 ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றமை இந்நாட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு திருப்பு முனையாகும். அத்தோடு பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை ஒன்று இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்றமையால், பிரதி நிதித்துவ ஜனநாயகத்தின் மூலம் அரசியல் செயல்பாடுகளில் தொடர்புபடும் சந்தர்ப்பம் பொது மக்களுக்குக் கிடைக்கப்பெற்றது. 1972, 1978 ஆம் ஆண்டுகளில் புதிய அரசியல் யாப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அரசியல் அரங்கில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சுதந்திரத்தைத் தொடர்ந்து வந்த மூன்று தசாப்தத்தில் இந்நாட்டு அரசியல் அரங்கில் தெளிவாகத் தெரியும் மாற்றங்களுடன் பொருளாதார, சமூகத் துறைகளில் ஏற்பட்ட விருத்தியும் அது தொடர்பான மேலதிக தகவல்களும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.


 இலங்கையில் சோல்பரி யாப்பு சுதந்திரம் 

இலங்கையின் அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக ஆராய்ந்தறிந்து உரிய ஆலோசனைகளை முன்வைப்பதற்காக பிரித்தானிய அரசாங்கந்தால் நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு 1944 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இலங்கைக்கு வந்தது. 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அவர்களுடைய அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி நாட்டின் உள்நாட்டு விடயங்களில் முழுமையான அதிகாரத்தை இலங்கையருக்கு வழங்கும் அரசியல் யாப்பு ஒன்றை அவர்கள் முன்வைத்தனர். அவர்களின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட வெள்ளை அறிக்கை இந்நாட்டு அரசுக் கழகத்தால் ற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் சோல்பரி அரசியல் யாப்புத் தொடர்பான அனுசரணை 1946 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரித்தானியாவால் வெளியிடப்பட்டது. 

சோல்பரி யாப்பின்படி நடைபெற வேண்டிய முதலாவது பாராளுமன்றத் தேர்தலை 1947 ஆம் ஆண்டின் மத்தியில் நடத்துவதற்குத் தீர்மானித்திருந்தாலும் இலங்கைக்கு சுதந்திரம் வழங்குதல் தொடர்பாக அதுவரை பிரித்தானியா எவ்வித அறிவிப்பும் செய்திருக்கவில்லை. இதனால் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையருக்கு உள்ள உரிமை பற்றி டீ.எஸ். சேனாநாயக்க உட்பட இந்நாட்டுத் தலைவர்கள் பிரித்தானியாவுக்கு தத்துவார்த்த ரீதியிலான கருத்துக்களை முன்வைத்தனர். இதற்கமைவாக தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பதாக விசேட பிரகடனம் ஒன்றைக் குடியேற்ற நாடுகளின் செயலாளர் வெளியிட்டார். அதன்படி பொதுநலவாயத்திற்கு உட்பட்ட சுதந்திர நாடொன்றின் அந்தஸ்தை இலங்கைக்கு வழங்குவதாகப் பிரகடனப்படுத்தினார். இதற்கிடையில் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களால் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் கட்சிகளின் நிலை வருமாறு.

இலங்கையில் 1947 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் கட்சிகளின் நிலை


கட்சிகள்

வெற்றிபெற்ற ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி

42

 

இலங்கை சமசமாஜக் கட்சி

 

10

 

தமிழ் காங்கிரஸ் கட்சி

 

07

 

இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சி

 

06

 

போல்ஷவிக் - லெனினிஸ்ட் கட்சி

 

05

 

இலங்கை கம்யூனிஸ்ட் சுட்சி

 

03

 

தொழிலாளர் கட்சி

 

01

 

சுயேச்சைகள்

 

21

 

மொத்தம்

 

95

 


இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றியமையால் சுயேச்சை அங்கத்தவர்கள் பலரினது ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தது. 1946 ஆம் ஆண்டிலிருந்து இந்நாட்டின் உள்நாட்டு திருவாக நடவடிக்கைகளை இலங்கையர்வசம் கையளிப்பதற்கு பிரித்தானிய அரசு விரும்பினாலும் வெளிநாட்டு விவகாரங்களைத் தொடர்ந்தும் பிரித்தானியாவின் கைவசம் வைத்திருப்பதற்கான ஏற்பாடு ஒன்று இருந்து வந்தது. தீவின் புவியியல் அமைவிடம், பாதுகாப்பு. யுத்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவமானபடியால் இந்நாட்டுடன் கொண்டிருந்த தொடர்புகளைப் பூரணமாகக் கைவிட்டுவிடப் பிரித்தானிய அரசு முன்வராமையே அதற்கான காரணமாகும். பிரித்தானியரின் இந்த எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்ட புதிய பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க அவர்கள் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரித்தானிய அரசாங்கத்துடன் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு தொடர்பான இரு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முன்வந்தார். பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமைவாக, தேவை ஏற்படும்போது கப்பல், விமானம் உட்பட ஏனைய படை நடவடிக்கைகளுக்கும் இலங்கையை உபயோகித்துக் கொள்வதற்கு இடமளிப்பதற்கு இணங்கினார். 

வெளிநாட்டு உறவு தொடர்பான ஒப்பந்தத்தின்படி சுதந்திர நாடு ஒன்றாக வெளிநாடுகளுடன் புதிதாக உறவுகளை மேற்கொள்வதற்கு பிரித்தானியாவின் உதவியை இந்நாட்டிற்கு வழங்குவதற்கு இலங்கை விரும்பியது. அதன்பின்னர் இந்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய இலங்கையின் சுதந்திரப் பிரகடனம் 1947 ஆம் ஆண்டு டிசெம்பர் 19 ஆந் திகதி வெளியிடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி தொடக்கம் அவற்றின் விதிகள் செயற்படுத்தப்பட்டதோடு, இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்றது. இதனடிப்படையில் இலங்கைக்கான சட்டங்களை இயற்றுவதற்கும் இந்நாட்டின் நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பிரித்தானிய அரசுக்கு இருந்த அதிகாரம் முற்றுப் பெற்று அவ்வதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்தது. 1948 ஆம் ஆண்டு பெப்பிரவரி 10 ஆந் திகதி புதிய பாராளுமன்றம் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டதோடு, பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களால் ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு, மீண்டும் சிங்கக் கொடி ஏற்றப்பட்டது. இதற்கமைய பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இலங்கை சோல்பரி அரசியல் யாப்பு

1931 - 1947 வரையான டொனமூர் அரசியல் யாப்பின் பின்னர், சோல்பரியின் அரசியல் யாப்பு செயற்படத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்புவரை அது செயற்பட்டது. சோல்பரி யாப்பின்படி அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆளுநர் நாயகம், பிரதமரும் அமைச்சரவையும், பாராளுமன்றம், நீதி என நான்கு துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆளுநர் நாயகம்

அதுவரை இருந்து வந்த ஆளுநர் பதவி அகற்றப்பட்டு, இங்கிலாந்தின் முடிக்குரிய பிரதிநிதியாக ஆளுநர் நாயகம் பதவி உருவாக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பின் கீழும் பிரித்தானிய மகாராணியே தொடர்ந்தும் இலங்கையின் தலைவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டபடியால் அரசியின் இந்நாட்டு பிரதிநிதியாக ஆளுநர் நாயகம் செயற்பட்டார். ஆளுநர் நாயகம் பதவி முழுமையாக பெயரளவு நிறைவேற்றுத் துறைப் பதவியாக இருந்ததோடு, அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது எப்போதும் போன்று பிரதமரின் ஆலோசனைப்படியே செயற்பட வேண்டியிருந்தது.

பாராளுமன்றம்

சோல்பரி யாப்பின்படி சட்டத்துறை தொடர்பாக பிரதிநிதிகள் சபை, செனட் சபை என்ற இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் 101 அங்கத்தவர்கள் இடம்பெற்றனர். அதில் 95 பேர் தேர்தல் தொகுதி அடிப்படையில் பொது மக்களினால் தெரிவு செய்யப்படுவதுடன் எஞ்சிய 6 பேரும் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சிறுபான்மையோருக்காக, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் நாயகத்தால் நியமிக்கப்பட்டோராவர். இச்சபையின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.

மூதவை (செனட்) எனப்பட்ட மேல் சபை அல்லது இரண்டாவது சபைக்கு 30 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபை மூலம் 15 பேர் நியமிக்கப் படுவதோடு, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் நாயகத்தால் 15 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். இச்சபையின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாகும்.

பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை

பிரதமர் அமைச்சரவையின் தலைவராவார். பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை அங்கத்தவர்களின் ஆதரவைப் பெறும் ஒருவர் ஆளுநர் நாயகத்தால் பிரதமராக நியமிக்கப்படுவார். இவ்வரசியல் யாப்பின்படி நிறைவேற்று அதிகாரம் அமைச்ச ரவையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் பிரதமரின் ஆலோசனைப்படி. ஆளுநர் நாயகத்தால் நியமனம் செய்யப்படுவர்.

பிரதமர். பாதுகாப்பு, வெளிநாட்டு விவகார அமைச்சுககளின் பொறுப்புக்களை வகிப்பார். நீதி அமைச்சரும் மேலும் இன்னொரு அமைச்சரும் மேல் சபையில் இருந்து நியமனம் செய்யப்படுவர். இங்கிலாந்தின் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக அமைச்சரவைக் கூட்டாகப் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியிருந்தது.

நீதிச் செயற்பாடுகள்

சோல்பரி அரசியல் யாப்பின்படி உயர் நீதிமன்றம் உட்பட நீதிமன்றத் தொகுதி ஒன்றால் நீதித்துறையின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆளுநர் நாயகத்தால் பிரதம நீதிபதியும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். பிரதம நீதிபதியின் தலைமையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிமன்றங்களுடன் தொடர்பான நீதிபதிகளின் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் அரசியல் கட்சி முறைமை

அரசியல் கட்சி முறை என்பது பாராளுமன்ற ஜனநாயகம் நிலவும் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்ற கட்டாயமான ஒரு பண்பாகும். பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆரம்ப காலத்தில் இரு கட்சிகள் மட்டுமே காணப்பட்டன. அவை இரு கட்சி முறை ஆட்சி எனப்பட்டன. பிரான்ஸ், ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா, இலங்கைப் போன்ற ஆசிய நாடுகளிலும் பல அரசியல் கட்சி கள் காணப்படுகின்றன. அவை பல கட்சி முறை ஆட்சி எனப்பட்டன.

அரசியல் கட்சி முறையால் அவ்வவ் கட்சிகளின் கொள்கை அடிப்படையில் மக்களை ஒன்றுதிரட்டுவது, கட்சியின் கொள்கைகளை மக்கள் முன்கொண்டு செல்வது என்பன இலகுவாயுள்ளன. அத்தோடு பாராளுமன்ற ஜனநாயகம் மக்கள் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் ஆட்சி முறையானபடியால், அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையிலான உறவைக் கட்டியெழுப்புவதற்கும் அரசியல் கட்சி முறைமை அவசியப்படுகிறது. இலங்கையில் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டது

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலேயாகும். 1931 ஆம் ஆண்டில் இந்நாட்டிற்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த போதிலும் 1947 ஆம் ஆண்டு வரை பொதுத் தேர்தல்களில் கட்சி முறைமைக் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்நாட்டில் முதன்முறையாகக் கட்சி முறைமை பிரயோகிக்கப்பட்டது 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போதேயாகும். அத்தேர்தலில் இலங்கை சமசமாஜக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி என்னும் பல கட்சிகள் போட்டியிட்டன.

இலங்கை சமசமாஜக் கட்சி

இலங்கை சமசமாஜக் கட்சி இந்நாட்டின் பழைய அரசியல் கட்சியாகும். பிரித்தானியரின் ஆட்சியின்போது கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்றிருந்த கலாநிதி என்.எம். பெரேரா, சுலாநிதி கொல்வின் ஆர். டீ சில்வா. திரு பிலிப் குணவர்தன போன்ற தலைவர்கள் வெளிநாடுகளில் நிலவிய இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டு அம்முறையை இந்நாட்டில் செயற்படுத்துவதற்காக 1935 ஆம் ஆண்டு இலங்கை சமசமாஜக் கட்சியை உருவாக்கிக் கொண்டனர். பின்னர் அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியினரால் வைத்தியர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 1943ஆம் ஆண்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி

1946 ஆம் ஆண்டளவில் இடதுசாரி, சிறுபான்மை இனக் கட்சிகள் சிற்சிலவும் தொடங்கப்பட்டிருந்தாலும் இந்நாட்டு நடுநிலை அரசியல்வாதிகளுக்கு என்று ஓர் அரசியல் கட்சி உருவாகி இருக்கவில்லை. 1947 ஆம் ஆண்டில் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற இருந்தமையால் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களின் தலைமையில் 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அப்போதிருந்த இலங்கை தேசிய சங்கம், எஸ். டபிள்யூ. ஆர். உபண்டாரநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த சிங்கள மகா சபை அங்கத்தவர்கள் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து கொண்டனர். ஆகையால் அக்கட்சி ஆரம்பத்திலிருந்தே பலம் வாய்ந்த ஓரணியாகத் திகழ்ந்தது. 1947 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 95 வேட்பாளர்களை நிறுத்தி, 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின்னர் 1952 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 54 தொகுதிகளில் வென்று ஆட்சியை அமைத்துக் கொள்ளும் பலம் அக்கட்சிக்குக் கிடைத்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

எஸ். டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, 1951 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார். ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிகமாக சாதாரண மக்களின் தேவைகள் தொடர்பாகக் கவனஞ்செலுத்திய அக்கட்சி, சுயமொழி அறிஞர்கள், புத்த பிக்குகள், தேசியவாதிகள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றிருந்தது. 1951 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பங்கேற்று 9 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அக்கட்சி இன்னும் பல அரசியல் கட்சிசுளை ஒன்று சேர்த்துக் கொண்டு மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பெயருடன் 1956 பொதுத் தேர்தலில் பங்கு பற்றி 51 தொகுதிகளில் வென்று அரசாங்கம் ஒன்றை அமைத்தது. அதற்கமைய 1956 இலிருந்து 1959 வரை பண்டாரநாயக்க அவர்கள் இந்நாட்டின் பிரதமராகச் செயற்பட்டார். 1959 ஆம் ஆண்டில் அவர் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் அவரது மனைவியான திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர் உலகின் முதலாவது பெண் பிரதமர் ஆவார்.

ஏனைய அரசியல் கட்சிகள்

முழு நாட்டிலும் வேட்பாளர்களை நிறுத்தக்கூடியதாயிருந்த ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளைத் தவிர சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இன்னும் பல சிறிய கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. ஏ.ஈ. குணசிங்க அவர்களால் அமைத்துக் கொள்ளப்பட்ட தொழிலாளர் கட்சி. ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தமிழ் காங்கிரஸ் கட்சி என்பன அதில் குறிப்பிடத்தக்கவையாகும். இந்நாட்டுத் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகத் தீவிர கவனஞ் செலுத்திய அக்கட்சி 1947 பொதுத் தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1949 ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் சமஷ்டிக் கட்சியை ஆரம்பித்ததுடன், தமிழ் காங்கிரஸ் கட் சிக்கு கிடைத்து வந்த மக்களின் ஆதரவு குறைவடைந்தது.

இலங்கையில் காணப்பட்ட அரசியல் கட்சி முறையின்படி ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டிற்கும் மேலதிகமாக மேலும் சிறிய கட்சி கள் பலவும் காணப்பட்டமையால் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஒரு கட்சிக்கும் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் காணப் பட்டன. ஆகையால் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணிகளை அமைத்துக் கொண்டு கூட்டரசாங்கங்கள் உருவாவது பொதுவாகக் காணப்படுகின்றது.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments