விவசாயம் பற்றிய தகவல் தமிழ் (Information about agriculture in Tamil)

விவசாயம் பற்றிய தகவல் தமிழ்

உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான்.

வீட்டு விலங்குகளினதும் தாவரங்களினதும் (பயிர்கள்) உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழி வகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான நீர்ப்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு வேளாண் தொழில் தொடர்பு கொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களைச் சாகுபடி செய்தல், கால்நடைகளை வளர்த்தல், மேய்ச்சல் நிலத்திலோ தரிசு நிலத்திலோ கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை வேளாண்மையின் அடித்தளமாக விளங்குகின்றன.

வேளாண்தொழிலை தீர்மானிக்கும் புவியியல் காரணிகள்

காலநிலை, நிலத்தோற்றம், மண்வளம், நீர்வளம் மற்றும் பணியாளர்கள் ஆகிய காரணிகள் வேளாண் தொழில்களில் வேறுபாடுகளையும், பரவலையும் நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன.

விவசாயத்திற்கு தேவையான காலநிலை

வெப்பநிலையும் மழையளவு ஆகியவை வேளாண்தொழிலைப் பாதிக்கும் காரணிகளாகும். காலநிலை மாற்றம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத பிரதேசங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி வேளாண்மையை பாதிக்கும் திறனுள்ளது. விவசாயம் புவி வெப்பமடைவதை தணிக்கவோ அல்லது மோசமாக்கவோ செய்யலாம்.

விவசாயத்திற்கு தேவையான வெப்பநிலை

6° சென்டிகிரேடுக்கும் குறைவாக நிலவும் வெப்பநிலையில் மண் குளிர்ந்து உறைந்து போவதால் பெரும்பான்மையான செடிகள் அவ்வெப்ப நிலையில் வளர இயலாது. வெவ்வேறு கால நிலை வட்டாரங்களில் வெவ்வேறு வகையான பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. சான்றாக, நெல் அயன மண்டலத்தில் விளைவிக்கப்படும் முதன்மைப் பயிராகும். ஏனெனில் அதிக வெப்பமும், அதிகளவு நீரும் நெற்பயிர் வளரத் தேவைப்படுகிறது. கோதுமை ஒரு மித வெப்பமண்டலப் பயிராகும். கோதுமை வளரக் குளிர்ந்த காலநிலைத் தேவைப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து நிலங்களின் உயரம் மாறுபடுவதால் உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுடையதாக உள்ளது. அது வேளாண்தொழிலை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.அயனமண்டலத்திலுள்ள உயர் பகுதிகளில் மிதவெப்ப மண்டல பயிராகிய காரட் போற பயிர்களை விளைவிக்கலாம். பயிருக்குப் பயிர் வளர்ச்சிக் காலம் மாறுபடும். பருத்தி போன்ற பயிர்கள் முழுமையான வளர்ச்சிபெற 200 பனிபொழிவற்ற நாட்கள் தேவைப்படுவதால் குறைந்த வெப்பம் நிலவும் பருவ காலங்களில் விளைவிக்கப்படுகிறது.

விவசாயத்திற்கு தேவையான மழையளவு

காற்றிலுள்ல ஈரப்பதம் அப்பகுதியில் விளையும் பயிர்வகை, பயிர்வளர்வதற்கு ஏற்ற காலம் போன்றவற்றை நிர்னயிக்கின்றன. பருவகால மழைப்பொழிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பயிர்கள் வளர்வதற்கு அதிகமான மழைபொழிவு தேவைப்படுகிறது. ஆனால் மழைப்பொழிவு தகுந்த காலங்களில் அமையவில்லையெனில் அது பயிர் வளர்ச்சியினை வெவ்வேறு வகைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும். ஒவ்வொரு பயிருக்கும் அதன் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் நீரின் அளவு தேவைப்படுவதால் மழைப் பொழிவுகளில் ஏற்படும் மாற்றம் பயிர்களுக்கு அவசியமான ஒன்று. ஆகையால் பருவநிலைக்கு ஏற்ற மழைப் பொழிவு முக்கியமானது எனப் புலனாகிறது. எடுத்துக்காட்டாக காப்பிக்கு(கோப்பி) அறுவடையின்போதும், அறுவடைக்கு முன்பும் வறாண்ட நிலை தேவை. அதே பருவத்தில் சோளப்பயிர் விளைய நீர் மிகுதியும் தேவையாய் உள்ளது. ஒரு பகுதியில் விளையும் பயிரை அங்கு பெய்யும் மழையளவே தீர்மானிக்கிறது. நெற்பயிர் அதிகமான மழைப்பொழியும் இடங்களிலும், திணைவகைகள் வறண்ட பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது. மழையளவு குறைவாகப் பொழியும் இடங்கள் அல்லது மழை பொய்க்கும் இடங்களில் வேளாண்தொழில் செய்ய நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. கால்வாய்ப்பாசனம், தெளிப்பான் பாசனம், மையசுழற்சிப் பாசனம், சொட்டுநீர்ப்பாசனம் ஆகிய பாசனமுறைகள் இங்கு கையாளப்படுகின்றன.

விவசாயத்திற்கு உகந்த மண்வளம்

தமிழ்நாட்டில் செம்மண், கரிசல்மண், வண்டல் மண், களிமண் போன்ற மண்வகைகள் உள்ளன. இலங்கையில் வேறுசில மண்வகைகளும் உள்ளன. பிற நாடுகளில் இவற்றிலிருந்து மாறுபட்ட மண்வகைகளும் உள்ளன. பயிர்கள் வளர மண்வளம் ஒரு முக்கிய காரணியாகும். வெவ்வேறு பயிர் வளர்க்க வெவ்வேறு மண்வகைத் தேவைப்படுகிறது. ஆற்றுப் படுகைகளில் காணப்படும் வண்டல் மண் ஒரு வளமிக்க மண்ணாகும். ஏனெனில், மலையில் இருந்து வடியும் ஆறுகள் தொடர்ந்து ஊட்டச்சத்துக்களைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. கரிசல் மண் மற்றும் புல்வெளிமண் போன்ற மண்வகைகள் வேளாண்மைக்குப் பரவலாகப் பயன்படும் வளமான மண் வகைகளாகும்.

வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வேளாண்தொழிலின் வகைகளைப் புவியியல் காரணிகளைத் தவிர, சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளும் தீர்மானிக்கின்றன.

கரியமில வாயு பூமியின் வளிமண்டலத்தில் அதிகரிப்பது மண்ணில் உள்ள உயிர்மப் பொருளின் சிதைவடைவதால் வருகிறது. காற்று மண்டலத்திற்குள் உமிழப்படும் பெரும்பாலான மீத்தேன் நெற்பயிர் நிலங்கள் போன்ற ஈரமான நிலங்களில் உயிர்மப் பொருள் சிதைவடைவதால் உருவாகிறது.[14] மேலும், ஈரமான நிலங்களும் நைட்ரஜன் குறைவு மூலமாக நைட்ரஜனை இழந்து பசுமையில்ல வாயுவான நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிடுகின்றன.[15] மேலாண்மையில் ஏற்படும் மாற்றங்கள் பசுமையில்ல வாயு வெளியீட்டைக் குறைக்கலாம்.

விவசாய நிலத்தைத் தயார்செய்தல்

மண்னைத் தயார் செய்தல் என்பது பயிர் வளர்ப்புக்குத் தேவையான முதன்மையான செயலாகும். அடியில் உள்ள மண்ணின் சத்தை மேலே கொண்டுவரவும், கடினத்தன்மையை நீக்கவும் மண்ணைத் தயார் செய்தல் வேண்டும். இது உழுதல், சமன்படுத்தல் மற்றும் உரமிடல் ஆகிய செயல்களை உள்ளடக்கியதாகும்.

திருக்குறளின் உழவு என்னும் அதிகாரத்தில் வேளாண்மையைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

உழவன், ஒரு பலம் புழுதி கால் பலமாகும் படி தன் நிலத்தை உழுது காய விட்டால், ஒரு பிடி எருவும் இடாமலேயே அந்நிலத்தில் பயிர் செழித்து வளரும். இக்குறளின் மூலம் உழுதலின் அவசியத்தை புரிந்து கொள்கின்றோம், நன்கு உழுவதன் மூலம் காற்றோட்டம் அதிகமாகிறது. நிலத்தில் உள்ள இலை தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுகின்றது என அறிகின்றோம். மேலும்

ஏர் விட்டு உழுதலை விட எரு இடுதல் நல்லது, இவ்விரண்டும் செய்து களை எடுத்த பிறகு நீர் பாய்ச்சுவதை விட பயிரை அழியாமல் காப்பது நல்லது” – எனும் குறளின் மூலம் நம் முன்னோர்கள் பயிர்களுக்கு இயற்கை முறையில் எரு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தியதை அறியலாம்.

உழுதல் என்பது கீழ்மண்ணை மேலே கொண்டுவருதலும் அதன் கடினத்தன்மையை நீக்கி மெண்மையாக்குதலும் ஆகும். இதனால் மண்ணானது தாவரத்தின் வேர் சுவாசிக்கத் தேவையான காற்றை அளிக்கின்றது; ஈரப்பதத்தை நீண்ட காலத்திற்கு நிலைக்கச் செய்கிறது; நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதன் மூலம் வளமான மண்ணை மேலே கொண்டு வரச்செய்கிறது; களைத் தாவரங்களையும் அதன் விதைகளையும் மண்ணிலிருந்து நீக்குகிறது.இதனால் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்பதோடு மட்டுமல்லாமல், மண்ணரிப்பபை தடுக்கவும், கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடும் சிதைவைத் தூண்டவும், மண் உயிர்ப்பொருள் பெருகுவதையும் மாறுபடுவதையும் குறைக்கிறது.[

உழுதல் என்பது இரண்டு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று எருதுகள் மற்றும் ஏர்க்கலப்பைக் கொண்டு உழுதல் என்ற பாரம்பரிய முறை. மற்றொன்று ஏருந்து மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. மேலும் மண்வெட்டி, மண்வாரி, களைக்கொத்தி மற்றும் கோடரி என்பன உழுதல் செயலுக்குப் பயன்படும் பிற கருவிகளாகும்.

விவசாயம் நெல் விதைத்தல்

பயிர்வளர்ப்பில் மிகவும் முதன்மையான செயல்களில் இதுவும் ஒன்றாகும். மண்ணில் விதையை ஊன்றும் செயலுக்கு விதைத்தல் என்று பெயர். விதைகள் தரமானதாகவும் தொற்ரு நோய்க் கிருமிகள் இல்லாததாகவும் இருக்கவேண்டும். விதைப்பதற்கு முன் நிலத்தை ஈரப்படுத்த வேண்டும். விதைத்தல் இரண்டு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று தூவுதல் என்ற பாரம்பரிய முறையாகும். இம்முறையில் ஈரமான நிலத்தில் விதைகளானது கையினால் தூவப்படுகிறது. மற்றொன்று எந்திரம் மூலம் விதைத்தல் (துளைமுறை). இம்முறையில் விதையானது புனலின் உதவிகொண்டோ அல்லது கூரிய முனைகொண்ட இரண்டு அல்லது மூன்று குழல்களில் உதவியுடனோ விதைக்கப்படுகின்றது.

இயற்கை மற்றும் செயற்கை உரமிடல்

ஊட்டச்சத்து வடிவில் தாவரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக மண்ணுடன் சேர்க்கப்படும் பொருட்களே இயற்கை அல்லது செயற்கை உரங்கள் ஆகும். எல்லாத் தாவரங்களும் மண்ணிலிருந்து தனது வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்தினைப் பெறுகின்றன. இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும்போது மண்ணிலுள்ள கனிமங்கள் குறைகின்றன. எனவே விவசாயிகள் தாவர வளர்ச்சிக்குத் தேவையான சரியான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக மண்ணில் இயற்கை (தழையுரங்கள்) மற்றும் செயற்கை உரங்களை இடுகின்றனர். பயிர்களுக்கான ஊட்டச்சத்து அளிப்பு மற்றும் கால்நடை உற்பத்தி உள்ளிட்ட, மற்றும் காலநடைகளால் உற்பத்தி செய்யப்பட்ட எருவை பயன்படுத்தும் முறை ஆகிய இரண்டையும் ஊட்டச்சத்து கட்டுப்பாடு உள்ளடக்கியிருக்கிறது.

ஊட்டச்சத்து அளிப்பு இயற்கை உரங்களாகவோ எரு, பச்சை எரு, கழிவுரம் மற்றும் வெட்டியெடுக்கப்படும் தாதுக்களாகவோ இருக்கலாம். பயிர் ஊட்டச்சத்தைப் பயன்படுத்துதல் பயிர் சுழற்சிமுறை போன்றபாரம்பரிய உத்திகளைப் பயன்படுத்துவதாகவும் இருக்கலாம். உணவுப் பயிர் வளர்கின்ற இடத்தில் கால்நடைகளை வைத்திருப்பதன் மூலமோ, வறண்டதாகவோ ஈரமாகவோ உள்ள பயிர் நிலம் அல்லது மேய்ச்சல் நிலத்தில் கிடைக்கின்ற எருவின் உருவாக்கங்களைப் பரவச்செய்வதன் மூலமோ எரு பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது.

வேளாண்மை சார்ந்த தொழில்கள்

வேளாண்மை என்பது தொன்றுதொட்டு நம் நாட்டில் நடப்பில் இருக்கும் தொழில். உழவின்றி உலகம் இல்லை என்பது உண்மையான கூற்று. வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் நம் வயிற்றுக்கு உணவாக செல்வதில்லை. எல்லா இடத்திலும் எல்லா பொருளும் விளைவதில்லை. உணவை பதப்படுத்துவது இந்த குறைக்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

வேளாண்மை பொருட்களை மூலதனமாக வைத்து இயங்கும் தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் எனப்படும். இவை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், வேளாண் இடுபொருட்கள் (விதைகள், உரங்கள்) தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகும்.

விவசாய நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை என்பது உலகின் பெரும்பாலான பகுதிகளில் சில கோணங்களில் ஏற்படுகின்ற, மழையளவு பற்றாக்குறையையும் மாறுபாட்டையும் கையாளப் பயன்படுத்தப்படுவதாகும்[13]. விதைமுளைத்தல், மண்ணிலிருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சுதல் மற்றும் ஒளிச்சேர்க்கை போன்ற செயல்களைச் செய்ய தாவரங்களுக்கு நீர் இன்றியமையாததாகும். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தாவரங்களின் வளர்ச்சிக்காக நீர்ப்பாய்ச்சும் செயல் நீர் மேலாண்மை எனப்படும். கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குளங்கள், ஏரிகள், ஆறுக, அணைகள், கால்வாய்கள் போன்றவை நீர்ப்பாய்ச்சுதலுக்குத் தேவையான ஆதார மூலங்களாகும். சில விவசாயிகள் பற்றாக்குறையினை நிரப்ப நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்துகின்றனர்.


களைத் தாவரங்களிலிருந்து பயிரினைப் பாதுகாத்தல்

சாகுபடி செய்யப்படும் பயிரினூடாக வளரும் தேவையற்ற புல். அமராந்தசு, காட்டு ஓட்சு முதலிய களைச்செடிகளை விளை நிலத்திலிருந்து நீக்கும் செயலுக்கு களையெடுத்தல் அல்லது களை நீக்குதல் எனப்பெயர். இக்களைகள் அதற்குத் தேவையான நீர் ஊட்டச்சத்துகள், வாழிடம், சூரியஒளி போன்றவைகளுக்காக சாகுபடி செய்யப்படும் பயிர்களுடன் போட்டியிடுகின்றன. எனவே இவற்றை நீக்குகிறார்கள். பொதுவாக களைச்செடிகள் மனிதர்களால் வேருடன் பிடுங்கி எடுக்கப்படுகின்றன அல்லது களைக்கொத்தி, மண்தட்டும்பொறி, பரம்புப் பலகை போன்ற கருவிகள் கொண்டு நீக்கப்படுகின்றன.


வேளாண்மை விதைத் தொழில்

விளை பொருட்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது விதைகள் மற்றும் உரங்கள். நல்ல விதையின்றி விளைச்சல் இல்லை. தரமான விதைகள் தான் விளை பொருட்களின் உற்பத்திக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. விதைகள் உற்பத்தி செய்யும் தொழிலின் வயது சுமார் நாற்பது வருட காலம். விதைத்தொழிலில் முக்கிய பங்கு வகிப்பது பொதுத்துறை. பொதுத்துறையில் தேசிய விதைக் கழகம், இந்திய மாநில பண்ணை கூட்டவை, மாநில விதைக் கழகங்கள் மற்றும் மாநில பண்ணைக் கழகம் ஆகியவை அடங்கும். இவை மாநில வேளாண் பல்கலைக் கழகங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் முதலியவை கண்டுபிடிக்கும் விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன. இந்தியாவில் சுமார் இருநூறு முதல் ஐநூறு தனியார் விதை நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் ஐந்து மில்லியன் மதிப்புள்ள விதைத் தொழில் மக்களின் உணவுப் பழக்கவழக்க மாறுதலினால் வியக்கத்தக்க மாற்றத்தை அடைந்து கொண்டு இருக்கிறது.

தமிழகம், மேற்கு மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெற்கு இராஜஸ்தான் மற்றும் ஆந்திராவில் விவசாயிகள் வியாபார குறியிட்ட விதைகளை அதிகம் பயிரிடுகின்றனர். சின்ஜென்டா, இண்டோ - அமெரிக்கன் விதைகள், மான்சான்டோ இந்தியா, பயனியர் விதைகள் முதலிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்த முன்னேற்றத்தைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் இந்திய நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சித்திறன், வியாபார யுக்தி முதலியவற்றில் அதிக கவனம் செலுத்தி முன்னேற வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றன. இனிவரும் காலங்களில் மரபுவழி மாற்றப்பட்ட விதைகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாக இருக்கிறது.

விவசாய உரங்கள்

வேளாண் இடுபொருட்களில் உரங்கள், உணவு உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உணவு, காற்று, நீர் எப்படி தேவையாக இருக்கிறதோ அதே போல் பயிர் வளர்ச்சிக்கு நிலம், நீர், உரம் மூன்றும் முக்கியமாகத் திகழ்கின்றன. உரங்கள் இரண்டு வகைப்படும். அவை, உயிர்பொருள் உரம் மற்றும் உயிர்பொருள் சார்பில்லாத உரம்.

வேதியியல் பொருள் கலந்த உரங்களை அதிகம் பயன்படுத்தியதால் கலப்படமற்ற மாட்டுப்பாலிலும், உன்னதமான தாய்ப்பாலிலும் வேதியியல் பொருள் கலந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் உயிர் உரங்களின் பங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.

உணவு பதனிடும் தொழில்

உணவு பதனிடுவது தொன்றுதொட்டு நம் நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. நம் வீட்டு பாட்டியின் கைப்பக்குவம், இன்று வளர்ந்து வரும் ஒரு தொழில். இன்றைய கணினி யுகத்தில் அவசரகதியில் மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் உடனடி உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் அவசர நேரத்தில் கைகொடுக்கின்றன. உணவு பதனிடும் தொழில்களானவை பழங்கள் மற்றும் காய்கள் பதனிடும் தொழில், மீன் பதனிடும் தொழில், பால் பதனிடும் தொழில் எனப் பல்வகைப்படும். இந்தியர்களிடம் செலவிடக்கூடிய வருமானம் அதிகம் இருப்பதால் உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருகின்றன. இதனால் தானியங்கள், பருப்பு வகைகள், உப்பு சர்க்கரை, நறுமணப்பொருட்கள் இவைகளில் செலவிடும் தொகை குறைந்து பால் பொருட்கள், மாமிசம், முட்டை, மீன், பழங்கள், பானங்கள் முதலியவற்றில் செலவிடும் தொகை அதிகரித்துவிட்டது.

உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கான மதிப்பு மக்களிடையே உயர்ந்து கொண்டு வருகிறது. ஏனென்றால் விற்பனையில் உணவு பதனிடும் தொழில் 150 சதவீதத்திற்கு மேல் வளர்ந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பல இத் தொழிலில் நுழைந்துள்ளன. வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் இந்திய தயாரிப்பு என்ற முத்திரையோடு அனுப்பப்படுகின்றன. பாலிலிருந்து, பால்பவுடர், வெண்ணெய், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தொன்று தொட்டு இந்தத் தொழில் குடிசைத் தொழிலாக இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் வரும் 2020ல் பால் உற்பத்தி 220-250 மில்லி லிட்டரை எட்டும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.

வேளாண் சார்ந்த தொழிலில் வாய்ப்புகள்

இந்தியாவின் மாறுபட்ட தட்பவெப்பநிலை, பலவகை உணவுப் பொருட்கள் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. 900 மில்லியன் மக்கள் தொகையும் அதில் 250 மில்லியன் மத்திய வர்க்கத்தினரும் இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைத் திறனுக்கு எடுத்துக்காட்டு. ஒரு சராசரி இந்தியன் வீட்டு செலவில் சுமார் ஐம்பது சதவீதம் உணவுப்பொருட்களுக்கு செலவிடுகிறான். இந்தியாவின் மக்கள் தொகை தொழிலுக்குத் தேவையான ஆட்கள் பற்றாக்குறையைக் குறைக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனிடும் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதத்தை விட குறைவானது. பழங்களில் மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், சப்போட்டா, இலந்தைப்பழம், மாதுளை, சீதாப்பழம் முதலியவற்றிற்கு அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. காய்கறிகளில் வெண்டை, பாகற்காய், பச்சை மிளகாய் முதலியவைகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை (organic farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறையாகும்.[1] இயற்கை வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.


இயற்கை வேளாண்மையின் முக்கிய கோட்பாடுகள்

பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (IFOAM) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது. (கீழ்கண்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்பட வேண்டும்).

  • நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)
  • உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல் மேம்பட உதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)
  • வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் உறவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் நடுநிலையாக செயல்பட வேண்டும் (நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு).
  • நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு கவனமாகவும் பொறுப்பாகவும் செயல்பட வேண்டும் (பராமரிப்பு பற்றிய கோட்பாடு)

நில மேலாண்மை

சத்துகளில் பயிர் வளர்ச்சியில் முதன்மையான தழைச்சத்தை சரியான அளவு சரியான நேரத்தில் கிடைக்க்வேண்டும். பயறு வகை பயிர் சுழற்சி, பசுந்தாள் எரு, மூடு பயிர்கள் மற்றும் ஊடுபயிர் முறையில் பேபேசியே குடும்பத்தாவரங்களைப் பயிரிடும்போது ரைசோபியம் என்ற நுண்ணுயிர் தழைச்சததை வேர் முடிச்சிகளில் வளி மண்டலத்திலிருந்து பொருத்துகிற்து. பூச்சிகள் மற்றும் தாவர நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் ஊடு பயிரும் பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ள் தழைசத்தை மண்ணில் அதிகரிக்கும். பயிர் எச்சங்கள் மீண்டும் மண்ணுக்குள் உழப்படுவதின் மூலமும் தழைச்பயிருக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யாலாம் கரிம விவசாயிகள் மக்கிய கால்நடை எருக்களையும், பலவகைப்பட்ட புண்ணாக்கு,பதனப்படுத்தப்பட்ட சில விதைகளின் தூள் போன்றவற்றை பயன்படுத்தலாம்

மணிச்சத்திற்காக ராக் ஃபாஸ்ஃபேட், க்ரீன்சேண்ட் போன்ற கனிமப் பொடிகள், பொட்டாஷியம் அளிக்கும் இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் பொடாஷ் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் மண்ணின் கார அமில நிலை திருத்தப்பட வேண்டியிருக்கும். இயற்கையான கார அமில் நில் திருத்தங்களில், சுண்ணாம்பு மற்றும் கந்தகம் ஆகியவை அடங்கும். ஆனால், இரும்பு சல்ஃபேட், அலுமினியம் சல்ஃபேட், மாக்னிஷியம் சல்ஃபேட் மற்றும் கரையக் கூடிய போரோன் பொருட்கள் போன்ற செயற்கைக் கூட்டுப் பொருட்கள் கரிம வேளாண்மையில் அனுமதிக்கப்படுவதில்லை.[

விவசாயம் சார்ந்த கால்நடை வளர்க்கும் பண்ணைகள் முயல் மசால், வேலிமசால் போன்ற தழச்சத்தை வெளியிடும் கால்நடைத் தீவனப் பயிர்களைப் பயிரிடப்படுவதாலும் மண்ணின் வளம் அதிகரிக்க உதவுகின்றன

களைகளைக் கட்டுப்படுத்துதல்

  • கையால் களையெடுப்பது
  • பூண்டு, லவங்க எண்ணெய், வெண்காரம்
  • சாப்பட்டு உப்பை தெளித்தல்
  • சூரிய ஒளிப்படுத்துதல் (இது தெளிவான பிளாஸ்டிக்கை நிலத்தின் மேற்புறமாக வெயில் காலத்தில் 4-6 வாரங்களுக்கு வைப்பதை ஈடுபடுத்துகிறது)
  • வினிகர் ஆகியவை அடங்கும்.
  • நெல் விவசாயத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட ஒன்று, ஈரமான நெல் வயல்களில் வாத்து மற்றும் மீன்களை இடுவதாகும். இவை, களை மற்றும் பூச்சிகள் ஆகிய இரண்டையுமே தின்று விடுகின்றன

நோய்களைக் கட்டுப்படுத்துதல்

களைகள் மட்டும் அல்லாது நுண்ணுயிர்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றில் ஆதிரப்பொட்டுக்கள் அடங்கும் (உதாரணம்: புழு பூச்சிகள், மிகச் சிறு பூச்சிகள்) மற்றும் நூற்புழுக்கள் ஆகியவை. பூசணங்களும், நுண் கிருமிகளையும்நோயை உண்டாக்கும்.

தீமைபயக்கும் பூச்சிகள் பொதுவான ஒரு பிரச்சினையாகும். கரிம மற்றும் கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகள் ஆகிய இரண்டுமே, அவை சுற்றுப் புறச் சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் பாதிப்புக்களால் சர்ச்சைக்குள்ளாகின்றன. இவற்றை சமாளிக்க ஒரு வழி, இந்தப் பூச்சிகளை அடியோடு புறக்கணித்து விட்டு தாவரத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். காரணம், தாவரங்கள் தமது வளர்ச்சி மிகுந்த அளவில் பாதிக்கப்படுவதற்கு முன்பாக, தமது இலைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளானாலும், அவற்றால் சமாளித்துக் கொள்ள முடியும்.[4]:67

பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தைத் தவிர்ப்பதற்கு, இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றைச் சுற்றிலும் பைகளை வைத்து, இலை, பழம் போன்ற மக்கிப் போகக் கூடிய பொருட்களையும், நோய்வாய்ப்பட்ட தாவரங்களையும் அகற்றி விட்டு மற்றும் தாவரங்களை ஒரு திடத் தடுப்பான் கொண்டு மூட வேண்டும். மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, தாவரத்திற்கு துணைத் தாவர ங்களையும் நடலாம். மேலும், பலவிதமான பொறிகள், ஒட்டு அட்டைகள் (பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டு கொள்ளவும் இவற்றைப் பயன்படுத்தலாம்), மற்றும் பருவ நீட்டிப்பு ஆகியவை பயன்படும். உயிரியனம் சார்ந்த பூச்சிக் கொல்லி, இயற்கையான பூச்சி எதிரிகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. பரிந்துரைக்கப்பட்ட பயனுள்ள பூச்சிகளில், மைன்யூட் பைரேட் பக்ஸ் பிக் ஐட் பக்ஸ் மற்றும் குறைந்த அளவில் (பறந்து விடக் கூடிய) லேடி பக்ஸ் ஆகியவையாகும். இவை அனைத்துமே பல வகையான பூச்சிகளைத் தின்னக் கூடியவை. வண்ணத்துப் பூச்சிகள் என்பவையும் திறன் வாய்ந்தவைதாம். ஆனால், இவை பறந்து விடக் கூடியவை. தச்சைக் கிளிகள் என்பவை மெள்ள நகர்பவை; மற்றும் குறைவாக உண்பவை. ஒட்டுண்ணிக் குளவி தாம் தேர்ந்தெடுக்கும் இரையைப் பொறுத்தவரை மிகவும் திறனுள்ளதாக இருக்கும். ஆனால், ஏனைய சிறு பூச்சிகளைப் போல, இதுவும் வெளிப்புறங்களில் திறன் குறைந்தே காணப்படும். காரணம் காற்று இதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுதான். சிறு பூச்சிகளைக் கொன்று தின்னும் பூச்சிகளும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் திறன் உள்ளவைதாம்.[4]:66-90

வேம்பு போன்ற கரிம பயன்பாட்டிற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பலவகை பூச்சிக் கொல்லிகளும், பச்சைப் பூச்சிக்கொல்லி என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக கரிம பூச்சிக் கொல்லிகள், செயற்கைப் பூச்சிக் கொல்லிகளை விட பாதுகாப்பானவை, மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஆதரவானவை; ஆனால், கண்டிப்பாக இவை அனைத்துமே அப்படித்தான் என்று சொல்வதற்கில்லை.[4]:92 . பிரதானமாக பயன்படுத்தப்படும் மூன்று கரிம பூச்சிக் கொல்லிகள் பிடி (ஒரு நுண்ணுயிர் நச்சு), பைரெத்ரம் மற்றும் ரொடெனோன் ஆகியவை.

கருத்தாய்வுகளின்படி, 10% கரிம விவசாயிகள் இவற்றை முறையாக அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்; ஒரு கருத்தாய்வின்படி, கலிஃபோர்னியாவில் 5.3% காய்கறி விவசாயிகளே ரோடெனோன் பயன்படுத்துகிறார்கள்; 1.7% விவசாயிகள் பைரெத்ரம் பயன்படுத்துகிறார்கள்.(லோட்டர் 2003:26) 2005ஆம் வருடத்தின்போது, மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அதிக அளவில் நச்சுப் பொருள் உடைய ரோடெனோன் யூ.எஸ். கரிம விவசாயிகளுக்காக கருத்தளவில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், பொருட்கள் ஏதும் கரிமப் பொருட்கள் மறு ஆய்வு நிறுவனத்தால் மறு ஆய்வு செய்யப்படவில்லை.[6] நிகோடின் சல்ஃபேட்டையும் பயன்படுத்தலாம்;[7] அது விரைவிலேயே உடைந்து விடும் தன்மை கொண்டிருந்தாலும், நச்சுப் பொருளும் அதிக அளவில் கொண்டது, ஏறத்தாழ அல்டிகார்ப் அளவு நச்சு உடையது.[4]:104 குறைந்த அளவு நச்சுப் பொருள் கொண்டிருப்பினும், திறனுள்ள கரிம பூச்சிக் கொல்லிகளில், வேம்பு, ஸ்பினோசாட், சோப்புகள், பூண்டு, நாரத்தை எண்ணெய், காப்சைசின் (விரட்டுப் பொருள்), பேசிலஸ் பொபில்லே , ப்யூவாரியா பாசியனா மற்றும் போரிக் அமிலம் ஆகியவை அடங்கும்.[4]:110 பூச்சி மருந்துக்கான எதிர்ப்பைக் குறைப்பதற்கு, பூச்சிக் கொல்லிகளை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.

நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும். அனைத்து சமயங்களிலும் பஞ்சகவ்யா (compost tea) திறனுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவை திறனற்றவையா, அல்லது ஆபத்து கூட விளைவிக்கக் கூடியவையா என்பது பற்றி கவலை உள்ளது.[9] பாலிகல்சர் செய்வதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்க முடியும். நோய் எதிர்ப்பு கல்டிவர்களை வாங்கலாம். கரிம பூசணக் கொல்லிகளில் பேக்டீரியா பாசில்லஸ் சப்டிலிஸ், பாசில்லஸ் ப்யூமிலஸ் மற்றும் ட்ரிகோடெர்மா ஹர்ஜியனும் ஆகியவை அடங்கும். இவை வேர்களைத் தாக்கும் நோய்களைப் பொறுத்தவரை திறனுள்ளவை. போர்டெக்ஸ் மிக்ஸ் காப்பரை உள்ளடக்கியது. இதைப் பல விதங்களில் கரிம பூசணக் கொல்லியாகப் பயன்படுத்தலாம் (citation needed).

பூசணம் மற்றும் சில பூச்சிகள் ஆகியவற்றிற்கு எதிரான திறனை கந்தகம் (சல்ஃபர்) கொண்டுள்ளது. சுண்ணாம்பு கலந்த கந்தகமும் (லைம் சல்ஃபர்) கிடைக்கப் பெறுகிறது. ஆனால், இது தாவரங்களை சேதப்படுத்தி விடக் கூடும். பொட்டாஷியம் மற்றும் சோடியம் பைகார்பனேட் ஆகியவையும் பூசண காளான் எதிர்ப்புத் திறன் உடையவை. தாவரங்களின் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கும் சில தாவர செயலூக்கிகள், அவற்றில் பெரும்பான்மையானவை இரசாயணமாக இருப்பினும்,  கரிமமாகக் கருதப்படுகின்றன.

பூச்சிக் கொல்லிகள்

பெரும்பான்மையான இயற்கை வேளன்மை விளைநிலங்கள் பாரம்பரியமான பண்ணைகளை விடக் குறைவான அளவிலேயே பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றன. சில பூச்சிக் கொல்லிகள் சுற்றுச் சூழலை பாதிக்கின்றன; அல்லது மனித ஆரோக்கியத்திற்கு நேரடியான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. கரிம வேளாண்மையில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் ஐந்து பூச்சிக்கொல்லிகள்: பிடி (நுண்ணுயிர் நச்சு),பைரெத்ரம், ரோடெனோன்[சான்று தேவை], காப்பர் மற்றும் சல்ஃபர் ஆகியவையாகும். 

10 சத விகிதத்திற்கும் குறைவான கரிம விவசாயிகளே இந்த பூச்சிக் கொல்லிகளை முறையாக அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் என்று கருத்தாய்வுகள் கண்டறிந்துள்ளன; ஒரு கருத்தாய்வின்படி, கலிஃபோர்னியாவில் 5.3% காய்கறி விவசாயிகளே ரோடெனோன் பயன்படுத்துகிறார்கள்; 1.7% விவசாயிகள் பைரெத்ரம் பயன்படுத்துகிறார்கள்.(லோட்டர் 2003:26) ரசாயனம் சார்ந்த பூச்சிக் கொல்லிகளை குறைப்பதும் அவற்றை ஒரேயடியாக அவற்றை நிறுத்துவதும், தொழில் நுட்ப ரீதியாக சவாலாக உள்ளன. புதிதாக வரும் கரிம விளை நிலங்கள் இந்தப் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒதுக்கி விடுகின்றன பல நேரங்களில் மற்ற பூச்சிக் கொல்லித் திட்டங்களுக்கு கரிம பூச்சிக் கொல்லிகள் இணை நிறைவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டின் மிக முக்கியமான விளைவு, அந்தப் பூச்சிக் கொல்லிகள் நீருடன் கலந்து பரவி விடுவதுதான். யூஎஸ்டிஏ இயற்கை வளப் பாதுகாப்பு சேவை, விளை நிலங்களில் பூச்சிக்கொல்லிகள் நீருடன் கலந்து அதை மாசுபடுத்துவதால் விளையும் சுற்றுச் சூழல் ஆபத்தை ஆராய்கிறது. அது முடிவாக இவ்வாறு கூறுகிறது: மொத்தமாகப் பார்க்கையில், கடந்த இருபத்து ஆறு வருடங்களாக நாட்டின் பூச்சிக் கொல்லி பற்றிய கொள்கைகள், விளை நிலப் பரப்பு மற்றும் அதில் இடப்படும் பூச்சிக் கொல்லிகளின் எடை சற்றே அதிகரித்திருந்தாலும், பூச்சிக் கொல்லியினால் விளையும் ஆபத்தைக் குறைத்துள்ளன." இருப்பினும், இன்னும் முன்னேற்றம் காணப்படாத எத்தனையோ பகுதிகள், மற்றும் குடிநீர், மீன், பாசி மற்றும் க்ரஸ்டாசியன்ஸ் ஆகியவற்றிற்கான ஆபத்து மிக அதிக நிலையில்தான் இருக்கிறது."

பூச்சிக் கொல்லி எதிர்ப்புடைய, மரபியல் திருத்தப்பட்ட பயிர்கள் பூச்சிக் கொல்லிப் பயன்பாட்டிற்கு மாற்றாகக் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், மரபியல் திருத்தப்பட்ட பயிர்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் நீண்ட காலப் பயன்பாடு பற்றிய கவலைகளால், மரபியல் திருத்தம் கரிம வேளாண்மை இயக்கத்தால் மிகவும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments