ஸ்ரீ - என்பது தமிழ் எழுத்தல்ல - ஆனால் தமிழ் தந்த எழுத்து!
ஆம்... ஸ்ரீ என்பது தமிழ் மொழியிலிருந்து திரிந்து உருவான ஒன்று.
ஸ்ரீ (SRI) - என்ற சொல், தமிழ்ச்சொல்லான 'சீ' - என்பதன் திரிபாகும்.
- சீ > ஸ் ரீ > ஸ்ரீ(SRI) > SHRI - என உருமாற்றமடைந்த விதத்தை இறுதியில் தெளிவாகக் காணும் முன் ' சீ ' - என்பது குறித்து விளங்கிக் கொள்வோம்.
சீ = சிறப்புக்குறிக்கும் ஓர் அடைமொழி (An honorific prefix added to the names of deities, eminent persons and sacred objects).
சீ - என்றால் 'சீர் மிகு' - என்று பொருள்.
சீர் - என்றால் சிறப்பு , செல்வம், பெருமை, அழகு, உயர்வு, நன்மதிப்பு.
சீரிய = சிறப்பான. சீர்மை, சீர்த்த = சிறப்பு. சீர்த்தி - புகழ்.
உதா : சீரகம், சீராளன், சீராட்டு, சீர்வரிசை, (சீர்த்துழாய் = புனிதமான துளசி) .
இத்தனை பெருமைகளைக் குறித்த சீர் - என்ற சொல்லை 'சீ' என்ற ஒற்றெழுத்துச் சொல்லாகவும் பலசொற்களில் காணமுடிகின்றது.
உதா : சீதரன், சீதேவி, சீரங்கம், சீமை, சீவன், சீகாழி, சீதனம், சீமந்தம், சீமான், சீமாட்டி, சீம்பால், சீயான்.
ஸ்ரீ - யின் சரியான பொருளறியாமல், அது சீர் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபு என்பதை அறியாமையால் ஸ்ரீ - க்கு மாற்றாக 'திரு' வை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இரண்டும் வெவ்வேறு பொருள் குறிப்பன.
திரு - பற்றி விரிவாகப் பார்ப்போம்.
"நிறையே அருளே உணர்வொடு திருவென" - தொல்காப்பியம்.
திரு - என்பது திரண்டது, திரட்சிப் பொருள் குறித்தது.
- தில் > திர் > திரள்.
திர் > திரு = திரண்ட செல்வம், செல்வத்தின் தெய்வம். - திரு - என்பது முதன் முதலில் செல்வத்தைக் குறித்து, செல்வத்தை வழங்கும் இலக்குமி யையும் குறித்தது. பிற்காலத்தில் பல்பொருள் குறித்து மேலும் நீட்சியடைந்தது .
- திரு > திருமகள்.
திரு = தெய்வம் மற்றும் பெரியோருக்கான சிறப்பு முன்னொட்டு.
உதா : உயர்திரு, தெய்வத்திரு, திருமகள், திருநாமம், திருத்தலம், திருச்சிற்றம்பலம், திருநீறு, திருமணம், திருப்பாற் கடல், திருப்பாவை, திருக்குறள், இன்ன பிற.
- திரு நின்ற ஊர் = திருமகள் வந்து நின்ற ஊர்.
திரு பதிந்த தலம் = திருப்பதி.
திருவாகிய தெய்வம் வாசம் புரியும் இல் = திருக்கோயில்.
இத்தகைய கோயில் அமைந்த தலங்களை 'திரு' - என்ற முன்னொட்டு கொண்டு பெயரிடுவது தமிழர்களின் தனிச்சிறப்புகளில் ஒன்று.
உதா : திருப்பதி, திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருமழிசை, திருச்செந்தூர்.
துக்கடா : சீ - எப்படி 'ஸ்ரீ' - ஆனது?
மொழி உச்சரிப்பு முறை என்பது ஒருவருடைய நாடு, தட்ப வெப்பம், வாழ்வுமுறை, உணவுப் பழக்கம் ஆகியவை சார்ந்து அமைவதாகும். மண்ணின் மைந்தர்கள் உச்சரிக்கும் சொல்லின் தொனி, சொல்லுக்குத் தரப்படும் அசையழுத்தம் போன்றவை அந்நிய மொழியாளர்களுக்கு இயல்பாக கைவருவது மிக மிகக் கடினம்.
ஸ, ஷ, ர - போன்ற ஒலிகளை பொருத்தமற்ற இடங்களில் நுழைத்து தமிழ்ச் சொற்களைப் பேசுவதே அவர்களின் இயல்பாக இருந்தது.
தமிழ்ச் சொற்களின் ஊடே R - ஐ நுழைப்பது ஒரு வகை திரிபு.
* சுதி > ஸ்ருதி.
(சு > ஸ்ரு ஆனது போலவே…சீ > ஸ் ரீ ஆனது).
- படி > ப்ரதி.
மெது > ம்ருது.
மதங்கம் > ம்ருதங்கம்.
துவம் > த்ருவ
புடவி > ப்ருத்வி.
கமம் > க்ராம. - தமிழ் >த்ரமிள.
- பயணம் > ப்ராயண
சீ > ஸ்ரீ - என சமயம் சார்ந்த வழக்கில் திரிந்தது போலவே ...
சீ > ஜீ எனத்திரிவதை மக்கள் வழக்கிலும் நம்மால் அதிகம் காணமுடியும்.
- சீவன் > ஜீவன்.
- சீயர் > ஜீயர் - என்ற சொல்லும் இப்படி வந்ததே! சீயர் = பெரியோர்.
- இந்தி போன்ற மொழிகளில் (காந்திஜி, ராஜாஜி) - வழங்கப்படும் 'ஜி' என்கிற மரியாதை பின்னொட்டும் நம் 'சீ' - என்ற சொல்லின் திரிபே!
- சீ > ஜீ.
சீர்மிகு சொல்லான 'சீ' - யைப் பயன்படுத்துவோம் இனி…ஸ்ரீ க்கு மாற்றாக
0 Comments