திருக்குறள் இல்வாழ்க்கை அதிகாரம் - 005. (Thirukkural Ilvalkkai Athikaaram - 005)

 திருக்குறள் இல்வாழ்க்கை அதிகாரம் - 005

திருக்குறள் இல்வாழ்க்கை

குறள் : 41

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

குறள் விளக்கம்:

மனைவியோடு கூடிச் சிறந்த வாழ்க்கை வாழ்பவனே கல்விநிலை, மனத்தவநிலை, துறவு நிலை என்னும் மூன்று நிலைகளில் இருப்போர்க்கு உற்ற துணைவன் ஆவான்.


குறள் : 42

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

குறள் விளக்கம்:

மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்களுக்கு உதவுபவன்.



குறள் : 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

குறள் விளக்கம்:

வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்ந்து மறைந்த நல்லோரை போற்றுதல், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.


குறள் : 44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

குறள் விளக்கம்:

பொருள் சேர்க்கும் போது பழிக்கு அஞ்சிச் சேர்த்துச் செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.


குறள் : 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

குறள் விளக்கம்:

ஒருவனது குடும்பவாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையே அன்பும் அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.


குறள் : 46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவது எவன்.

குறள் விளக்கம்:

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.


குறள் : 47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

குறள் விளக்கம்:

அறத்தின் இயல்போடு இல்வாழ்கை வாழ்கிறவன்; வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.


குறள் : 48

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

குறள் விளக்கம்:

மற்றவரையும் அறநெறியில் ஒழுகச்செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை நடத்திடின் அது தவம் செய்வாரை விட மிக்க வல்லமை உடைய வாழ்கையாகும்.


குறள் : 49

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

குறள் விளக்கம்:

அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.


குறள் : 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

குறள் விளக்கம்:

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் நல்லோர்களின்(தேவருள்) ஒருவனாகவே மதிக்கப்படுவான்.


பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்.
அதிகாரம்: 
இல்வாழ்க்கை.


பொருள் விளக்கம்

மணக்குடவர் உரை

பரிமேலழகர் உரை

மு. வரதராசன் உரை

கலைஞர் உரை

சாலமன் பாப்பையா உரை



Thirukkural ilvalkkai Athikaaram - 005

Thirukkural ilvalkkai Athikaaram - 005




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments