திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் - 001. (Thirukkural Kadavul Vazhththu Athikaaram - 001)

 திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் - 001


திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் - 001

குறள் : 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு..

குறள் விளக்கம்:

எழுத்துகளெல்லாம் ‘அ’ எழுத்தைத் தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன. அதுபோல் உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன.



குறள் : 2

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

குறள் விளக்கம்:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஒரு பயனும் இல்லை.


குறள் : 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

குறள் விளக்கம்:

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.


குறள் : 4

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

குறள் விளக்கம்:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.



குறள் : 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

குறள் விளக்கம்:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை.



குறள் : 6

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

குறள் விளக்கம்:

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப்பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழிக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்கை வாழ்வர்.



குறள் : 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

குறள் விளக்கம்:

தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.



குறள் : 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

குறள் விளக்கம்:

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பது கடினம்.



குறள் : 9

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

குறள் விளக்கம்:

கேட்காத செவி; பார்க்காத கண் முதலியன போல் எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவையாகும்.



குறள் : 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

குறள் விளக்கம்:

கடவுளின் திருவடிகளை அடைந்தவர், பிறவியாகிய பெரிய கடலை கடப்பார், அடையாதவர் அதனைக் கடக்கமாட்டார்.


பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.


பொருள் விளக்கம் 

மணக்குடவர் உரை

பரிமேலழகர் உரை

மு. வரதராசன் உரை

கலைஞர் உரை

சாலமன் பாப்பையா உரை



திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் - 001




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

1 Comments

  1. உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete